அறையை விட்டு வெளியேறுகிறபோது ஜன்னல்கள் தெருவில் அலைந்திருக்க மேசையில் எனது முகம் தனித்துக் கிடக்கிறது

Monday, April 7, 2008

பல்லி வசித்த அறைக்கு திரும்பியது

--------------------------தீபச்செல்வன்

அவனுக்கு சொல்லாமலே
நான் அறையை விட்டு போய்விட்டேன்
எனது புத்தகங்களையும்
உடுப்புகளையும்
வந்து தேடினான்
எனது கட்டிலுக்கு கீழாய்
பழைய செருப்பு கிடந்தது
முகம்
பார்க்கும் எனது கண்ணாடியையும்
பழைய
வானொலிப்பெட்டியையும்
அவனுக்காய்
விட்டுச்சென்றிருந்தேன்
கண்ணாடியின் மூலையில்
உடைந்த
எனது துண்டு முகம்
ஒட்டியிருந்ததாய்
யாரிடமோ சொல்லியிருந்தான்
தண்ணீர் கூஜாவில்
தனித்தமுகம்
மிதக்கக்கண்டான்
அந்த வானொலிப்பெட்டி
எப்பொழுதும்
பாடியபடியிருந்தது
அது ஒரு குளிரான அறை
நான் வேறொரு
அறைக்கு சென்றபோது
என் புத்தகங்களிற்குள்ளும்
ஆடைகளிற்குள்ளும்
வெக்கை புகுந்தது
அந்த அறையின்
பயங்கரத்தை பற்றி
நான் அவனிடம் எதுவும் சொல்லவில்லை
அதற்கு பிறகும்
அவன் என்னை கண்டு பேசினான்
நான் ஒரு நாள்
அந்த பழைய அறைக்கு
சென்று
அவனுக்கு பக்கத்தில் படுத்திருந்தேன்
அவனது அறை
வெளித்து காற்று நிரப்பியிருந்தது
ஆறுதலாய் பேசினான்
அறையின் சுவர்கள் எங்கும்
புன்னகை
பூத்து விரிந்து கிடந்தது
தனியாளாய் படிகளால்
கீழே இறங்கினேன்
பயங்கர அறை ஒன்றினுள்
சென்றடங்குவதை
அவன் கண்டான்
வெளியில் தூக்கியெறிந்த
ப்பாக்கோடு
வீதியில் நின்றேன்
அந்த இரவில் என்னை
யாரும் காணவில்லை
மீண்டும் அவன் என்னை
கூட்டிச் சென்றான்
அந்த அறைக்கு
மாடியின் படிகள் பூத்திருந்தன
------------------------
(எனது அறை நண்பன் விமலேஷிற்கு)

-----------------------------------------

Thursday, April 3, 2008

சிகரட் நண்பன்

--------------------------தீபச்செல்வன்

வாகனங்கள் புகைத்தபபடி
போய்க்கொண்டிருந்தது
எனக்கு
ஒரு சிகரட் வேண்டும்
என்றான் நவராஜ்
அல்லது
என்னிடம் இருபது ரூபா இருக்கிறது
வா
ஒரு சிகரட் புகைப்போம் என்றான்.

கடையின் மேல் மாடியிலிருந்து
நானும் அவனும்
சிகரட்டை குடித்துக்கொண்டிருந்தோம்
கடையின் சமையல் பகுதியும்
புகைத்தபடியிருந்தது

அந்த மாடிக்கு செல்லும்
படிகள்
சாம்பல் படிகளாகியிருந்தன
ஒரு சிகரட்டை புகைப்பதற்காக
என்னை நகர் முழுவதும்
தேடிக்கொண்டு வந்தான்.

ஒரு நாள் இரவு
பெட்டிக்கடை ஒன்றிற்கு
பக்கத்தில்
நானும் அவனும்
ஒரு சிகரட்டை மாறிமாறி இழுத்தோம்.

அவனின் வீட்டில்
முழுநாளும் தங்கியிருந்தபோது
அம்மாவுக்கு தெரியாமல்
மாமரத்தில் ஏறி சிகரட்டை இரகசியமாய் குடித்தோம்
மாம்பூக்களில் கலந்திருந்தன சாம்பல்.

நான் உதிர்ந்த சாம்பலுக்காய்
வருத்தப்பட்டு தேடினேன்
விழுந்திருந்த ஓவியங்களை
ரசித்துவிட்டிருக்க மிதிபடும்
சாம்பலை கைகளால் மூடினேன்
எப்போழுதுக்குமாய் எனது தோள்களை
இறுகப்பிடித்திருந்தான்.

சைக்கிளின் முன்னாலிருந்தான்
பொக்கற்றில் கிடக்கும்
ஒரு சிகரட்டோடு
அந்த சைக்கிள் நகர மறுத்தது.

நாளைக்கு நீ போகாதே என்றான்
என்றாவது நான்
போயாகவேண்டியிருந்தது
அன்று முழுக்க அவனின்
தேளில் நகராமல் சாய்ந்திருந்தேன்.

சாம்பல் கிண்ணத்தில் நிறைந்து
கிடந்தன
சாம்பல்களோடு
சிகரட்டின் அடித்துண்டுகள்
சிகரட்டில் கலந்திருந்த நமது சொற்கள்
கிண்ணத்தில் நிரம்பிக்கிடந்தது.

நமது வாடிக்கையான தேனீர்கடையின்
மொட்டைமாடியில்
நம்மோடு இரண்டு சிகரட்டுகள்
புகைந்தன
அவனின் முகம் கரைந்தபடியிருந்தது

நான் நிலவைப் பார்த்தேன்
அதுவும்
ஒரு சிகரட்டை புகைக்க
கொட்டிக்கொண்டிருந்தது சாம்பல்
நமது நகரமெங்கும்.....
-------------------------------------------------
(எனது உயிர்த்தேழன் நவராஜிற்காக..)
--------------------------------------------------------

செலவு

-------------------------தீபச்செல்வன்

மூன்று நூறு ரூபாய்
தாள்களின்
முகத்தோடு பியர்
சிரித்துக்கொண்டிருந்தது
கிளாசில்
நிரம்பியிருந்த
வீண்செலவை
குடித்து விட்டு திமிரடைந்தேன்.

கலைச்செலவு
இருபத்தைந்து ரூபா
மதியமும் இரவும்
தொண்ணுறு ரூபா
ஜயாயிரம் ரூபாவில்
மீதி
படிப்புபகரணங்களுக்கு என்று
அவன் சிரித்தபடி கூறினான்.

மாலைத் தேனீரை தவிர்க்கப்போறேன் என்றான்.

அம்மாவின் காசுகள்
வியர்வைகள் என்றான்
எனக்கு வந்த
இரண்டாயிரம் ரூபாவில்
பல ஆயிரம்
அம்மாவின் களைப்புகள் கேட்டன.

அந்த சின்னவன் சிரித்தான்
எனது முகத்தில்
ஓங்கி அறைந்தது
அந்த பொறுப்புடைய வாழ்க்கைச் சிரிப்பு.

கிளாஸ் உடைய
அதற்குள்
எனது உடைந்த முகம்
நொருங்கிக் கொட்டியது...
----------------------------------------------------