அவனுக்கு சொல்லாமலே
நான் அறையை விட்டு போய்விட்டேன்
எனது புத்தகங்களையும்
உடுப்புகளையும்
வந்து தேடினான்
எனது கட்டிலுக்கு கீழாய்
பழைய செருப்பு கிடந்தது
முகம்
பார்க்கும் எனது கண்ணாடியையும்
பழைய
வானொலிப்பெட்டியையும்
அவனுக்காய்
விட்டுச்சென்றிருந்தேன்
கண்ணாடியின் மூலையில்
உடைந்த
எனது துண்டு முகம்
ஒட்டியிருந்ததாய்
யாரிடமோ சொல்லியிருந்தான்
தண்ணீர் கூஜாவில்
தனித்தமுகம்
மிதக்கக்கண்டான்
அந்த வானொலிப்பெட்டி
எப்பொழுதும்
பாடியபடியிருந்தது
அது ஒரு குளிரான அறை
நான் வேறொரு
அறைக்கு சென்றபோது
என் புத்தகங்களிற்குள்ளும்
ஆடைகளிற்குள்ளும்
வெக்கை புகுந்தது
அந்த அறையின்
பயங்கரத்தை பற்றி
நான் அவனிடம் எதுவும் சொல்லவில்லை
அதற்கு பிறகும்
அவன் என்னை கண்டு பேசினான்
நான் ஒரு நாள்
அந்த பழைய அறைக்கு
சென்று
அவனுக்கு பக்கத்தில் படுத்திருந்தேன்
அவனது அறை
வெளித்து காற்று நிரப்பியிருந்தது
ஆறுதலாய் பேசினான்
அறையின் சுவர்கள் எங்கும்
புன்னகை
பூத்து விரிந்து கிடந்தது
தனியாளாய் படிகளால்
கீழே இறங்கினேன்
பயங்கர அறை ஒன்றினுள்
சென்றடங்குவதை
அவன் கண்டான்
வெளியில் தூக்கியெறிந்த
ப்பாக்கோடு
வீதியில் நின்றேன்
அந்த இரவில் என்னை
யாரும் காணவில்லை
மீண்டும் அவன் என்னை
கூட்டிச் சென்றான்
அந்த அறைக்கு
மாடியின் படிகள் பூத்திருந்தன
------------------------
(எனது அறை நண்பன் விமலேஷிற்கு)
-----------------------------------------