அறையை விட்டு வெளியேறுகிறபோது ஜன்னல்கள் தெருவில் அலைந்திருக்க மேசையில் எனது முகம் தனித்துக் கிடக்கிறது

Friday, May 30, 2008

நிலவு தள்ளிப்போகிற இராத்திரி

--------------------------தீபச்செல்வன்

---------------------------------
எதாவது பேசிவிட்டுப்போ.

நிலவு தள்ளிப்போகிற
இராத்திரியில்
லட்சம் தனிமைகளில்
துடிக்கிறேன்
சாதுவான உனது
மௌனத்தில
ஆயிரம் முகங்கள் விரிகின்றன.

உன்னை நிரப்பி
வைத்திருந்த எனது பாடலில்
வழிகிறது
நீ இல்லாத கண்ணீர்.

நாம் பேசிக்கொண்டிருந்தபொழுது
வானம் வெளித்திருந்தது.

என்னைப்போலவே
கறுப்பாய் கிடக்கிறது வானம்
காற்றில்
மீட்கப்போன உனது
சொற்களை
தேடியலைந்து தோற்றுக்கிடக்கிறது
என் தொலைபேசி.

நிலவு குறைந்து விட்டது.

மீதியில் வடிகிறது நமது பிரிவு
நீயும் நானும்
முகங்களை மறைத்து
கடந்து போகிற
தெருவில்
நமது கால்களுக்குள்
மிதிபடுகின்றன
நமது காதலின் சொற்கள்.

முற்றி விளைந்த
இருள் மரத்தின் கொப்பில்
நான் ஏறியிருந்தபோது
உடைந்து விழுகிறது
கொப்பு
இரவுக் கிணற்றில்
கயிறாய் வந்து
உக்கி அறுகிறது உன் மௌனம்.

நிலவு இன்னும் குறைகிறது.

நீ வாசிக்காத
எனது கவிதையும்
செத்துக் கிடக்கிறது
சூரியன் இல்லாத காலையில்...........
--------------------------------------------

No comments: